Wednesday 20 April, 2011

மே 13ல் ஓட்டு எண்ணிக்கை: 17ம் தேதி ஆட்சி- கால அவகாசம் இல்லாததால் கட்சிகள் தவிப்பு

தமிழக சட்டசபைத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கைக்குப் பின் புதிய அரசு பதவியேற்க வெறும் 4 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளதால், அதற்குள் ஆட்சி அமைத்துவிட முடியுமா என்ற குழப்பத்திலும் கவலையிலும் திமுக, அதிமுக ஆகியவை ஆழ்ந்துள்ளன.


2006ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு 17-5-2006ம் தேதி காலை 9.30 மணிக்கு 13வது சட்டசபை கூடியது. உடனே புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர்.


அரசியல் சட்ட விதிகளின்படி தமிழகத்தின் 14வது சட்டசபை 17-5-2011ம் தேதி காலை 9.30 மணிக்குள் கூடி புதிய எம்.எல்.ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும். அதற்கு முன்பாக தற்காலிக சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

முன்னதாக இப்போது ஆட்சியில் உள்ள அரசு தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்க வேண்டும். அதன் பின்னர் அவர் வென்ற கட்சியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும்.

இதையடுத்து தேர்தலில் வென்ற கட்சியின் அமைச்சரவை பதவி ஏற்க வேண்டும். கூட்டணி ஆட்சியாக இருந்தால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுக் கடிதங்கள் ஆளுநரிடம் தரப்பட வேண்டும்.

இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்பதற்கான தகவல்கள் முறைப்படி அனுப்பப்பட்டு அனைவரும் சென்னைக்கு வரவேண்டும். யாராவது பதவி ஏற்க வரமுடியாத சூழ்நிலை இருந்தால் அவரது பதவியை முடக்கி வைப்பது குறித்து கவர்னர் முடிவு எடுக்கலாம். இதற்கெல்லாமே மொத்தமே 4 நாள் தான் அவகாசம் உள்ளது.

கூட்டணி ஆட்சி அமையலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையி்ல் திமுகவோ அல்லது அதிமுகவோ தங்களது கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தருவது குறித்து பேசி முடிவெடுக்க வேண்டும். சில கட்சிகள் பதவிக்காக கூட்டணி மாறக் கூட வாய்ப்புள்ளது. துணை முதல்வர், அமைச்சர் பதவிகள் என மோதல்கள் ஏற்பட்டால் உடனே இதில் தீர்வு கண்டு அரசை அமைத்துவிட முடியாது. இதற்கு கால அவகாசம் தேவைப்படும்.

ஆனால், தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 13ம் தேதி முடிவடைந்தது. அடுத்த மாதம் 13ம் தேதி தான் ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன. மின்னணு எந்திர வாக்குப்பதிவு என்பதால் 13ம் தேதி மாலைக்குள் அனைத்து முடிவுகளும் வெளியாகி விடும்.

என்றாலும் அமைச்சரவை பதவி ஏற்பு, சட்டசபை கூடுதல், துணை சபாநாயகர் தேர்வு, எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு ஆகியவற்றுக்கான கால அவகாசம் மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால் கட்சிகள் தவிப்பில் உள்ளன.

தேர்தல் முடிவை அறிய ஒரு மாத அவகாசம் கொடுத்த தேர்தல் ஆணையம், அமைச்சரவை, சட்டசபை கூட்டம், எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்பு போன்ற முக்கிய அரசியல் நடவடிக்கைகளுக்கு போதுமான கால அவகாசம் கொடுக்கவில்லை.

திமுகவோ, அதிமுகவோ எந்தக் கட்சியாக இருந்தாலும், தனித்து ஆட்சி அமைக்க 118 இடங்களில் வெற்றி பெற வேண்டும். 119 இடங்களில் போட்டியிட்டுள்ள திமுக தனித்து ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை.

கூட்டணிக் கட்சிகள் சேர்ந்து ஆட்சி அமைப்பதற்கான இடங்களைப் பெற்றாலும், யார், யாருக்கு அமைச்சர் பதவி, யார் யாருக்கு எந்தெந்த துறை என்பதை முன்கூட்டியே முடிவு செய்ய வேண்டிய நிலை உருவாகும். இதையெல்லாம் ஆலோசித்து முடிவு எடுக்க கால அவகாசம் இல்லை.

அதிமுகவைப் பொறுத்தவரை 160 இடங்களில் போட்டியிட்டுள்ளது. தனித்து பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றால் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஓரிரு நாளில் அதிமுக அரசு பதவியேற்கலாம். ஆனால், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றால் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலை ஏற்பட்டால் அதிமுகவுக்கும் கால அவகாசம் தேவை.

தேமுதிக என்ற யானையை கட்டுப்படுத்தி ஆட்சிக் கட்டிலில் ஏறுவது அதிமுகவுக்கு அவ்வளவு எளிதாக இருக்காது.

இது, தமிழகத்தில் இதுவரை இல்லாத புது அனுபவம் ஆகும்.

எந்தக் கூட்டணி அதிக இடங்களை பெறுகிறதோ அந்தக் கூட்டணி பெரும்பான்மையை காட்டும் வகையில் எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை, கவர்னரிடம் அளிக்க வேண்டும். அவர் திருப்தியடைந்தால், அந்த கூட்டணியின் தலைமையை ஆட்சி அமைக்க அழைப்பார். ஆனால், ஆதரவு கடிதம் தருவதில் சிக்கல் ஏற்பட்டால், எந்தக் கட்சி தனித்து அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதோ அக்கட்சியை ஆட்சி அமைக்க அழைத்து, குறிப்பிட்ட நாட்களுக்குள் பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்க வேண்டுமென கெடு விதிப்பார்.

இதனால் கட்சிகள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதோடு நிம்மதியின்றி தவித்து வருகின்றன என்பதே நிஜம்.

No comments:

Post a Comment

என் பதிவிற்கு ஓட்டளித்து கருத்து கூறி ஊக்கமளிக்கும் அன்பு நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...